விடுதலைப்புலிகளது செயற்பாடுகள் குறித்து அனைத்து விடயங்களும் அறியப்பட்டுள்ளதாகவும் அவை அனைத்தும் ஜெனிவா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் வெளியிடுவது என அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி விடுதலைப் புலிகள் செய்த போர்க்குற்றங்கள், நிதி சேகரிப்பு, ஆயுதங்களை பெற்றுக்கொண்ட நாடுகள் மற்றும் அதனைப் பெற்றுக் கொண்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் பற்றிய உண்மையான தகவல்கள் சேகரிக்கப்பட்டு ஆதார பூர்வமாக வழங்கப்படவுள்ளது.
ஜெனீவா கூட்டத்தொடருக்காக புலிகளின் சகல செயற்பாடுகளும் அடங்கிய 8 காணொளிகளை தாம் தயாரித்துள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்டத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். இந்த காணொளிகளில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுடன் இரகசியமான பேச்சுக்களை நடத்திய தமிழக அரசியல்வாதிகள் மற்றும் அவர்கள் இரகசியமான முறையில் வன்னிக்கு வந்தமை தொடர்பான காட்சிகளும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் புலிகளுக்கு சொந்தமான ஆயிரத்து 400 மில்லியன் பெறுமதியான ஆயுதங்கள் மீட்கப்பட்டன. அதன்படி மீட்கப்பட்ட ஆயுதங்கள், அந்த ஆயுதங்களை தயாரித்த நாடுகள் மற்றும் அதன் தயாரிப்பு இலக்கங்கள் ஆகியனவும் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை போர்க்குற்றங்களுடன் சம்பந்தப்பட்ட புலிகளின் 20 உறுப்பினர்கள் அமெரிக்கா, கனடா, நோர்வே, பிரித்தானியா, சுவிஸர்லாந்து, சுவிடன், பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இருப்பதுடன் அவர்களின் தகவல்களையும் வெளியிடப் போவதாக அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



0 comments to "புலம்பெயர் நாடுகளில் உள்ள விடுதலைப்புலிகளை மீண்டும் தடை செய்வோம் இலங்கைஅரசு."