இலங்கையில் கஞ்சாப் போதைப் பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டுச்சபை குறிப்பிடுகிறது.
இது குறித்து அச்சபையின் உதவிப் பணிப்பாளர் பத்ராணி சேனநாயக்க தெரிவிப்பதாவது,
இலங்கையில் 2011 ஆம் ஆண்டை விடவும் அதன் பின்னரான வருடங்களில் கஞ்சாப் போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
கஞ்சாப் பாவனையில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த வருடம் 11 வீதத்தினால் அதிகரித்துள்ளது. ஒரு இலட்சம் சனத்தொகையில் 184 பேர் கஞ்சா போதைப் பொருள் பாவிப்பவர்களாக உள்ளனர்.
கஞ்சாப் பாவனையின் போது கைது செய்யப்படுபவர்களில் அதிகளவிலானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர். புள்ளி விபரங்களின் படி, கடந்த வருடம் கஞ்சா பாவனையில் ஈடுபட்டு கைது செய்யபட்டவர்களில் 61 வீதமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாகவும், 11 வீதத்தினர் தென் மாகாணத்தைச் சேர்ந்தவர்களாகவும், கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் 6 வீதமாகவும் உள்ளனர்.
அது மாத்திரமின்றி மாவட்ட மட்டத்தில் 50 வீதமானோர் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவும் 7 வீதத்தினர் கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவும் 6 வீதத்தினர் அம்பாந்தோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.
அத்துடன் நாட்டில் சட்டவிரோதமாக 500 ஹெக்டேயரில் கஞ்சா உற்பத்தி செய்யப்படுகிறது. கிழக்கு மற்றும் தென் மாகாண வறள்வலயங்களில் கஞ்சா அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. கஞ்சா பாவனையாளர்களில் இள வயதினர் அதிகளவிலுள்ளமை கவலையளிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.



0 comments to "இலங்கையில் கஞ்சா போதைப்பொருள் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு"