Home » » நாலந்த எல்லாவல கொலை வழக்கு; பிரதி அமைச்சர் சுசந்த விடுவிப்பு

சுட்டுக்கொல்லப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாலந்த எல்லாவல கொலை குற்ற வழக்கிலிருந்து  பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த கொலை வழக்கு, இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தில் இன்று  புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டபோதே சுதந்த புஞ்சிநிலமே சகல குற்றச்சாட்டுகளிலிருந்தும் குற்றமற்றவர் என நீதிமன்றம் இனங்கண்டுள்ளதால் அவரை விடுவிப்பதாக நீதிபதி அச்சல வெங்கபுலி அறிவித்தார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாலந்த எல்லாவல மற்றும் அமைச்சர் டிலான் பெரேராவின் சாரதியை சுட்டுக்கொன்றமை, இன்னும் சிலருக்கு கடும் காயங்களை ஏற்படுத்தியமை, சட்டவிரோதமான முறையில் மக்களை ஒன்றுதிரட்டியமை ஆகிய குற்றச்சாட்டுகளே இவர் மீது சுமத்தப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணை இரத்தினபுரி நீதவான் நீதிமன்றத்தில் பல வருடங்களாக இடம்பெற்று வந்ததுடன் பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே,முன்னாள் பிரதியமைச்சர் மஹிந்த ரத்னதிலக்க உள்ளிட்ட ஐவருக்கு எதிராக சட்டமா அதிபரினால் மேல் நீதின்றத்தில்  குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்கும் தொடரப்பட்டது.

விசாரணை இடம்பெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் முன்னாள் பிரதியமைச்சர் மஹிந்த ரத்னதிலக்க மரணமடைந்துவிட்டார். அதன் பின்னர் முறைப்பாட்டு சாட்சியங்கள் யாவும் ஏழு மாத காலத்திற்குள் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

பிரதிவாதிகளுக்கு எதிராக முறைப்பாட்டாளரினால் போதியளவான சாட்சிகள் முன்வைக்காமையினால் குற்றவியல் தண்டைக்கோவைச்சட்டத்தின் 200 ஆவது சரத்தின் கீழ் பிரதிவாதிக்கு அழைப்புவிடுக்காமல் பிரதிவாதிகளை விடுவிக்குமாறு அவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள்  நீதிமன்றத்தில் கோரிநின்றார்.

அதனடிப்படையில் வழக்கின் இரண்டாவது,மூன்றாவது மற்றும் நான்காவது பிரதிவாதிகளுக்கு எதிராக போதியவான சாட்சியங்கள் இன்மையால் அவர்களை நீதிமன்றம் கடந்த வழக்கு தினத்தன்று விடுவித்தது. 

பிரதியமைச்சர் சுசந்த புஞ்சி நிலமேவுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பிலான தீர்ப்பை இன்று புதன்கிழமை வழங்குவதாக நீதிமன்றம் அன்று அறிவித்திருந்தது.

பிரதியமைச்சர் புஞ்சி நிலமேக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் முறைப்பாட்டாளரினால் போதியளவான சாட்சியங்கள் முன்வைக்காமையினால் அவரை விடுவிப்பதாக நீதிபதி அறிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாலந்த எல்லாவல குருவிட்ட பிரதேசத்தில் வைத்து 1997 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி சுட்டுக்கொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். இந்த சம்பவம் நடைபெற்ற போது சுசந்த புஞ்சிநிலமே மற்றும் மஹிந்த ரத்னதிலக்க ஆகிய இருவரும் ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தர்களாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். 

0 comments to "நாலந்த எல்லாவல கொலை வழக்கு; பிரதி அமைச்சர் சுசந்த விடுவிப்பு"

Leave a comment

Popular Posts Today

Welcome Guys

Template Information

Test Footer 2

Test Footer