Home » » விக்னேஸ்வரன் பதவியை ராஜனாமா செய்தால் இலங்கை அரசுக்கு இன்னும் பிரச்சனை தான், மகிந்த

"முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதவியில் இருக்க வேண்டும். அவர் பதவி விலகும் சாத்தியம் ஏற்பட்டால் அது நாட்டுக்கு நல்லதல்ல என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனிடம் தெரிவித்துள்ளார்.

வட மாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மூன்றில்  இரண்டு பெரும்பான்மை பெறும் என்று தெரிந்துகொண்டுதானே நான் வடக்கு தேர்தலை நடத்தினேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வட மாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறியின் கீழ் கடமையாற்ற முடியாது என முதலமைச்சர் விக்னேஸ்வரன் தனது பதவியை இராஜினாமா செய்து விடுவாரோ என  அச்சப்படுகிறேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் தெரிவிதுள்ளார்.

தனது 54ஆவது பிறந்த தினத்தினை ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் இன்று செவ்வாய்க்கிழமை கொண்டாடுகின்றார். பிறந்த நாளையொட்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மனோ கணேசனை தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதன்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது ஜனாதிபதியிடம் மனோ கணேசன் மேலும் தெரிவிக்கையில்,

"தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் ஆளுநர் சந்திரசிறியும் 13ஆம் திருத்தத்தின் பிரகாரம் கூட்டு குடித்தனம் செய்ய வேண்டியவர்கள். ஆனால், இன்று இந்த கூட்டு குடித்தனம் நடைபெறவில்லை. அங்கு முரண்பாடு முற்றி விவாகரத்தாகும் நிலைமை உருவாகி வருகிறது.

வடக்கின் மக்கள் ஆணையை பெற்ற முதல்வரும் நிறைவேற்று அதிகாரத்தின் ஆணையை பெற்றுள்ள சந்திரசிறியும் இன்று முரண்பட்டு கொள்கிறார்கள். இந்நிலையை நீடிக்க விடாதீர்கள்.  நிலைமை மென்மேலும் பாரதூரமடைந்து இந்நிலவரங்களின் கீழ் பணியாற்ற முடியாது என முதல்வர் தனது பதவியை ஒருவேளை இராஜினாமா செய்து விடுவாரோ என நான் அச்சப்படுகிறேன்.

இது அவரது நிலைப்பாடு அல்ல. இது எனது அச்சம். அப்படியான ஒரு சாத்தியத்தை நான் விரும்பவில்லை. ஆனால், நாட்டில் புதிய நெருக்கடி உருவாகக்கூடாது என விரும்பும் ஒரு பொறுப்புள்ள அரசியல் கட்சியின் தலைவர் என்ற முறையிலான எனது அச்சம் இதுவாகும். இதை  நாட்டின் ஜனாதிபதியான நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நாட்டின் தேசிய இனப்பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் அரசியல் ரீதியாக நடைபெற வேண்டும் என்பது எங்கள் எதிர்பார்ப்பு.  ஆனால், தேசிய இனப்பிரச்சினை தீர்வு வரும் வரை மாகாண நிர்வாகம் காத்திருக்க முடியாது.

நாட்டின் ஜனாதிபதியின் கவனத்தின் கீழ் அவரது பிரதிநிதியான ஆளுநருக்கும் முதலமைச்சருக்கும் மாகாண நிர்வாகம் தொடர்பிலான நிர்வாக ரீதியான பேச்சுவார்த்தைகள் நடைபெற வேண்டும் என நான் விரும்புகிறேன். வட மாகாண நிர்வாகத்தை நடத்தும் செயலாளர்கள் மாற்றப்படுவது உட்பட பல முடிவுகள் ஒருதலைபட்சமாக எடுக்கப்படுகின்றன. 

"இவை நிர்வாகத்தை குழப்புகின்றன. மாகாண நிர்வாகம் சுமூகமாக நடைபெற வேண்டும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன்" என்றார்  மனோ கணேசன்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்ததாவது,

"முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதவியில் இருக்க வேண்டும். நீங்கள் சொல்வதுபோல் அவர் பதவி விலகும் சாத்தியம் ஏற்பட்டால் அது நாட்டுக்கு நல்லது அல்ல. நான் யாழ்ப்பாணம் சென்று அவரை சந்திப்பேன் அல்லது விக்னேஸ்வரனை கொழும்பு வரும்படி அழைப்பு விடுப்பேன். 

எனது செயலாளர் லலித் வீரதுங்கவிடம் இன்று இதுபற்றி பணிப்புரை விடுப்பேன். வட மாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மூன்றில்  இரண்டு பெரும்பான்மை பெறும் என்று தெரிந்துகொண்டுதானே நான் வடக்கு தேர்தலை நடத்தினேன். 

அந்த மாகாணசபை சுமூகமாக நடக்க வேண்டும் என்பதை நான் விரும்புகிறேன் என்பதை தமிழ் மக்களுக்கு சொல்லுங்கள். ஆளுநரும்  முதல்வரும் முரண்படகூடாது. ஒருவரை ஒருவர் அனுசரிக்க வேண்டும். செயலாளர்களை மாற்றுவது பற்றி எனக்கு சரியான தகவல்கள்  இல்லை. 

இவை என்னிடம் நேரடியாக சொல்லப்பட வேண்டும். மாகாண சபை நிதி ஒழுங்குகள் பற்றிய சட்டம் இருக்கிறது. அதை இரு சாராரும் கடைப்பிடிக்க வேண்டும். இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவும் அக்கறை கொண்டு என்னிடம் ஆரம்பத்தில் கூறியுள்ளார். 

முதல்வரிடம் இதுபற்றி நான் உடனடியாக உரையாடுகிறேன். இதை அவர்களுக்கு  சொல்லுங்கள். தமிழ் மக்களிடமும்  சொல்லுங்கள். இன்னொன்றையும் அவர்களிடம் சொல்லுங்கள். வட மாகாண சபையை சேர்ந்த இரண்டு அமைச்சர்கள், வடக்கின் பாடசாலைகளுக்கு சென்று இனவாதம் கக்கும் பரப்புரைகளை செய்கிறார்கள் என எனக்கு தெரியவந்துள்ளது.


தமிழ் மற்றும் சிங்கள இனத்தவர் மத்தியில் இனவாத பிளவை ஏற்படுத்த  இவர்கள் முயற்சி செய்கிறார்கள். இனவாத பிரச்சாரத்தை பாடசாலை மாணவர் மத்தியில் செய்ய வேண்டாம் என்று அவர்களுக்கு எடுத்து கூறுங்கள்" என்றார் ஜனாதிபதி.

0 comments to "விக்னேஸ்வரன் பதவியை ராஜனாமா செய்தால் இலங்கை அரசுக்கு இன்னும் பிரச்சனை தான், மகிந்த "

Leave a comment

Popular Posts Today

Welcome Guys

Template Information

Test Footer 2

Test Footer